சுற்றாடல் பாதுகாப்புக்காக சுற்றாடல் அமைச்சினால் நியமிக்கப்பட்ட தேசிய சுற்றாடல் பேரவையின்  உறுப்பினர்கள் இன்று (நவம்பர் 29) நியமிக்கப்பட்டுள்ளனர். தேசிய சுற்றுச்சூழல் பேரவை  25 உறுப்பினர்களைக் கொண்டுள்ளதுடன் சுற்றாடல் சபையின் புதிய உறுப்பினராக ஆதிவாசிகளின் தலைவர் உருவரிகே வன்னியலெத்தோவை சுற்றாடல் அமைச்சர் நியமித்துள்ளார்.

தேசிய சுற்றாடல் சபைக்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்களை சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர மத்திய சுற்றாடல் அதிகார சபையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வழங்கி வைத்தார். தேசிய சுற்றுச்சூழல் கவுன்சிலின் 14வது அமர்வும் இன்று நடைபெற்றது.

அத்துடன், தேசிய சுற்றாடல் சபையின் தலைவராக மிக நீண்டகாலமாக சுற்றாடல் ஆர்வலராக செயற்படும்  சட்டத்தரணி ஜகத் குணவர்தன நியமிக்கப்பட்டார்.

சுற்றுச்சூழலை பாதுகாப்பதை அரசாங்கத்தினாலோ அல்லது சுற்றாடல் அமைச்சினாலோ மாத்திரம் செய்ய முடியாது எனவும் சுற்றுச்சூழல் நிபுணர்கள் மற்றும் பொதுமக்களின் ஆதரவு மிகவும் அவசியமானது எனவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

அண்மைக்காலமாக பெய்து வரும் கடும் மழையினால் ஆறுகள் மற்றும் நீரோடைகளை கடந்து பெருமளவான பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கடலில் கலப்பதாக கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். அதன் அறிக்கைகளின்படி, மழை காரணமாக சுமார் 250,000 தொன் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் கடலில் வீசப்பட்டுள்ளதாகவும், ஆனால் அந்த புள்ளிவிவரங்கள் குறித்து துல்லியமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.

 எவ்வாறாயினும், தேசிய சுற்றாடல் பேரவையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களிடம், சுற்றாடல் பாதிப்புகளை குறைப்பதற்கு புதிய யோசனைகள் மற்றும் முன்மொழிவுகளை சுற்றாடல் அமைச்சிடம் சமர்ப்பிக்குமாறும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

சுற்றாடல் அமைச்சின் செயலாளர் வைத்தியக்கலாநிதி அனில் ஜாசிங்க, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் அமரசிங்க, பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஜயசிங்க உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.